கவிதா குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? உச்ச நீதிமன்றம் கேள்வி!

கவிதா குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது: விசாரணை அமைப்புகளிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

தில்லி கலால் கொள்கை ஊழலில் பிஆர்எஸ் தலைவர் கவிதா ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிப்பதற்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயிடம் என்ன ஆதாரம் உள்ளது என்று காட்டுமாறு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வரும் ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் கோரிய கவிதாவின் மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கவிதா சார்பின் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, அவருக்கு எதிரான விசாரணையை ஏற்கனவே விசாரணை அமைப்புகள் முடித்துவிட்டதாகக் கூறி ஜாமீன் கோரினார். மேலும் இந்த இரண்டு வழக்குகளிலும் இணை குற்றவானியான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்பையும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணை முகமைகள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, கவிதா தனது செல்போனில் உள்ள ஆதாரங்களை அழித்ததாகவும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை கவிதா தரப்பு வழக்குரைஞர் போலி என்று கூறியுள்ளார்.

அவர் குற்றத்தில் ஈடுபட்டதைக் காட்ட என்ன ஆதாரம் உள்ள என்று பெஞ்சு ராஜுவிடம் கேட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜூலை 1ஆம் தேதி கவிதா தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12ஆம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் பதில் கேட்டது.

இரண்டு வழக்குகளிலும் கவிதாவின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, ரத்த செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை 2021-22 ஐ உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது தொடர்பான குற்றச் சதியில் முதன்மையானவர் என்று கூறி, கவிதாவின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்திலிருந்து கவிதாவை மார்ச் 15 அன்று அமலாக்கத் துறை கைது செய்தது. பின்னர், ஏப்ரல் 11ஆம் தேதி திகார் சிறையிலிருந்து அவரை சிபிஐ கைது செய்தது.

ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கவிதா மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!