மக்களவை முன்னாள் உறுப்பினர் அசோக் தன்வார், கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பகல் 1.45 மணி முதல் 2.45 மணிக்குள், ஹரியாணாவின் முக்கிய தலித் தலைவர் அசோக் தன்வார், தனது மனநிலையை திடீரென மாற்றிக்கொண்டுள்ளார். அதாவது, இன்று காலை, ஹரியாணா பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். திடீரென ஒரு மணி நேரத்தில், காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று வீட்டுக்குத் திரும்பியதாக உரையாற்றினார். இந்த மாற்றத்துக்குக் காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. ஆனால், முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் பாஜகவிலிருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் பகுதியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றி வந்தார்.
அப்போது, திடீரென அசோக் தன்வார் குறித்து அறிவிக்கப்பட்டது. மேடையில் தோன்றிய அசோக், தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.
கடந்த ஜனவரி மாதம்தான் பாஜகவில் அவர் இணைந்தார். தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில்தான் பேரவைத் தேர்தல் ஓரிரு நாள்களில் நடைபெறவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார்.
இவர், 2014 – 19ஆம் ஆண்டு வரை ஹரியாணா காங்கிரஸ் தலைவராக இருந்தார். திடீரென 2021ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அங்கிருந்து ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றார். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறினார்.
கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவிடம் தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மூன்று கட்சிகளுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார்.