அஸ்ஸாமில் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதலில் பாஜக தொண்டர் பலியானார்.
அஸ்ஸாமில் சமாகுரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக, வியாழக்கிழமையில் (அக். 24) காங்கிரஸ் வேட்பாளர் தன்சில் ஹுசைன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பியபோது, காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 15 பேர் காயமடைந்திருந்ததுடன், சில வாகனங்களும் சேதமடைந்திருந்தன.
இந்த நிலையில், மோதலின்போது பலத்த காயமடைந்த பாஜகவைச் சேர்ந்த பிபுல் சைக்கியா வெள்ளிக்கிழமை (அக். 25) காலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக அமைச்சர் ஜெயந்தா மல்லா பாருவா, “சமாகுரி இடைத்தேர்தலைச் சுற்றி, காங்கிரஸ் கட்சி வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது; ஜனநாயக உணர்வுக்கு எதிரானது. இந்த வன்முறை சம்பவத்தில், பாஜக தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனைக் கடுமையாக கண்டிக்கிறேன். சமாகுரியில் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸின் வன்முறை ஒன்றும் புதிதல்ல.
ரகீபுல் ஹுசைன் பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறார். இப்போது, அவரது மகன் தன்சில் ஹுசைன் தோற்கடிக்கப்படுவார் என்பதை அறிந்த ரகீபுல் ஹுசைன், மீண்டும் இதுபோன்ற இழிவான செயல்களைச் செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு, சமாகுரி மக்கள் உரிய நேரத்தில் பதிலளிப்பார்கள்’’ என்று கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் சமாகுரி, பொங்கைகான், சிட்லி, தோலாய், பெஹாலி ஆகிய 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராக ஆனதால், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
2001 ஆவது ஆண்டு முதல் சமாகுரி தொகுதியில் காங்கிரஸைச் சேர்ந்த ரகீபுல் ஹுசைன்தான் வெற்றி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சமாகுரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ரகீபுல் ஹுசைனின் மகன் தன்சில் ஹுசைன் போட்டியிடுகிறார்.
இதையும் படிக்க:வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!