காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழப்பு!

காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார்.

கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக வியாழக்கிழமை உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகராறு

2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, ​​ரெபேக்கா செப்டேஜியின் காதலன், டிக்சன் என்டிமா பெட்ரோலை வாங்கி, அவள் மீது ஊற்றி, எரித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் ரெபேக்கா செப்டேஜி நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி உகாண்டா தடகள கூட்டமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மரணம்

அந்தப் பதிவில், “குடும்ப வன்முறையால் துரதிருஷ்டவசமாக உயிரிழந்த எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி இன்று(செப் 5) அதிகாலை மரணமடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது மரணத்தை குடும்பத்தினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட எல்டோரெட்டில் உள்ள மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஓவன் மெனாச் தடகள வீராங்கனையின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்ததால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்