காமராஜர் 49-வது நினைவு நாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

காமராஜர் 49-வது நினைவு நாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

சென்னை: காமராஜரின் 49-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். கர்ம வீரர் காமராஜரின் 49-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவருக்குமரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள்பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணி யன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன், மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் கா.சங்கரதாஸ், அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக பாஜக சார்பில், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள்மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் சாய் சத்யன், காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கட்சி நிர்வாகிகளுடன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகளுடன் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்பட அரசியல் கட்சியினர் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதல்வராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்தவர் பெருந்தலைவர் காமராஜர். காந்தியப் பாதையிலிருந்து கடைசி வரை விலகாத கர்மவீரரின் வாழ்வுகாட்டும் ஒளியில் நடைபோடுவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து, ஏற்றமிகு தமிழ்நாட்டின் சமூகநலன்,கல்வி, தொழில் வளர்ச்சி ஆகி யவற்றுக்கான நலத்திட்டங்களை அளித்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் நினைவுநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,
கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் .

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: கல்வி, தொழில்துறை, விவசாயம், சமூக மேம்பாடுஎன அனைத்துத் துறைகளிலும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி, புதிய தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கர்மவீரர் காமராஜர். தமது ஆட்சிக் காலத்தில்,தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கும்,பல அரசு பொது நிறுவனங்களை உருவாக்கி, தொழில் புரட்சிக்கும்வித்திட்ட மேதை. இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கியவர்.

இன்றும் தமிழகத்தில் விவசாயத்துக்கு உயிர்நாடியாக விளங்குபவை கர்ம வீரர் கட்டிய அணைகள்தான். தமது நல்லாட்சியால் தமிழக மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய பாரத ரத்னா, பெருந்தலைவர் காமராஜர் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எளிமை, நேர்மை,தூய்மை எனும் தாரக மந்திரங்களைஅடிப்படையாகக் கொண்டு தமிழ் வளர்ச்சி, கல்விப் புரட்சி, தொழில் வளர்ச்சி, பாசனத் திட்டங்கள் என தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலத்துக்காக மட்டுமே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜரையும், அவர் ஆற்றிய சேவைகளையும் எந் நாளும் நினைவில் வைத்து போற்றுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

Related posts

சிறந்த இந்தியா உருவாக அக்கறை காட்டியவர் ரத்தன் டாடா: சுந்தர் பிச்சை புகழாரம்

லண்டன்-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

மும்பையில் லிப்ட் தருவதாக கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது