காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு: அன்பில் மகேஷ்

திருச்சி: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வட்ட பேருந்து சேவையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்புலி வார்டு ரோடு, காந்தி மார்க்கெட் போன்ற பகுதியிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை உறையூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வர பொதுமக்கள் இந்தப் பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 17 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவையை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் குறித்து விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்த கருத்து, அவரது கருத்து தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து என்று அவர்களது கட்சி நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதனால், இது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக, திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே, திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் அமைக்க, அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை வைக்கப்படும். இது குறித்து ஏற்கனவே திருச்சி மூத்த அமைச்சர் கே.என்.நேரு போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. திமுக அமைச்சர் முத்துசாமியும் இதை சொல்லி இருக்கிறார். எனவே, இதில் அரசியல் கலக்கக்கூடாது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். அதையே நாங்களும் சொல்கிறோம். என்றார்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் காலாண்டுத் தோ்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான தோ்வு செப். 19ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த வகுப்புகளுக்கான தோ்வு செப்.27-ஆம் தேதி நிறைவடையும்.

இதையும் படிக்க.. தங்கம் விலை நிலவரம்: ஒரு கிராமே ரூ.7 ஆயிரத்தைத் தாண்டியதா?

அதேவேளையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு செப். 20ஆம் தேதி தொடங்கி, செப்.27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக் கல்வியின் ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு விடுமுறையை, முந்தைய ஆண்டுகளில் வழங்கியதுபோல 9 நாள்களாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதாவது, தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத் தோ்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது, முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நிகழாண்டில் செப். 28 முதல் அக். 3 வரை ஐந்து நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் ஆகும். அதன்பிறகு, அக். 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அவ்வாறு பாா்க்கும்போது, இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என்பது உள்ளது. அக். 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 5-ஆம் தேதி ஒரு நாள் பள்ளிகள் இயங்க, மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளது. எனவே, அக். 4, 5 ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால், சனி, ஞாயிறுடன் சோ்த்து 9 நாள்கள் காலாண்டுத் தோ்வு விடுமுறையாக மாணவா்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்க.. புதுக்கோட்டை அருகே காரிலிருந்து ஐந்து உடல்கள் மீட்பு: தற்கொலையா?

மேலும், காலாண்டுத் தோ்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவா்களின் விடைத்தாள்களை ஆசிரியா்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றை சரிபாா்த்து எமிஸ் இணையத்தில் மாணவா்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விடுமுறை முடிவதற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தோ்ச்சி சதவீதத் தகவலைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி அளிப்பா். எனவே, பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டுகளைப் போல, மாணவா்களுக்கான விடுமுறையை 9 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

Mumbai: BEST Struggles To Meet Demand Of 3.5 Million Daily Passengers As Bus Fleet Shrinks Below 3,000

Navi Mumbai: 55-Year-Old Man Murders Live-In Partner Under Alcohol Influence In Panvel; Accused Previously Served Time For Wife’s Murder

Maharashtra Coastal Zone Authority Directs Raigad Collector To Probe CRZ Violations In Navi Mumbai PMAY Scheme