குடிநீர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி வசூலித்த தனியார் ஓட்டல்: ரூ.10,000 நஷ்டஈடு வழங்க புதுச்சேரி நுகர்வோர் ஆணையம் உத்தரவு
புதுச்சேரி: குடிநீர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி வசூலித்த தனியார் ஓட்டலுக்கு ரூ. 10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சுதர்சனன். இவர், கடலுார் சாலையில் உள்ள ஓட்டலில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அதில், அதிகபட்ச விலை ரூ.20 என குறிப்பிட்டிருந்தும், ஜிஎஸ்டி ஒரு ரூபாய் சேர்த்து ரூ.21 வசூலித்துள்ளனர். இதுகுறித்து சுதர்சனன், புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், “ஓட்டலில் ஜிஎஸ்டி விதிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்களை மீறி தண்ணீர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி வசூலித்தது முறையற்ற செயல். இதற்காக, வரிகள் உட்பட அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலுக்கான ஜிஎஸ்டி தொகை 1 ரூபாய், நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரத்து 500 ஆக மொத்தம் 12,501 ரூபாயை ஓட்டல் நிர்வாகம் மனுதாரருக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.