குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து: 3 சிறார்கள் உள்பட 7 பேர் பலி!

மும்பையில் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செம்பூர் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியில் இன்று(அக். 6) அதிகாலை 5.30 மணியளவில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. சித்தார்த் காலனியில் அமைந்துள்ள ஒரு இரண்டடுக்கு கட்டடத்தில் கீழ்தளத்தில் கடையும், மேல்தளத்தில் வீடும் அமைந்திருந்த நிலையில், கடையில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீப்பற்றியுள்ளது. மளமளவென பரவிய தீ மேல்தளத்திற்கும் பரவியதில் அங்கிருந்தவர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் வீட்டிலிருந்த பாரிஸ் குப்தா(7), நரேந்திர குப்தா(10), விதி சேதிராம் குப்தா(15) ஆகிய 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்… மகளிரால் மட்டுமே முடியும்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், கட்டடத்திலிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் போராட்டத்துக்கு பின், காலை 9.30 மணியளவில் தீ முழுவதும் அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்