கேரளம்: மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய நபர் 2 நாள்களுக்குப் பின் மீட்பு!59 வயதுடைய ஒருவர் இரண்டு நாட்களாக லிஃப்ட்டுக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரளத்தில் இரண்டு நாட்களாக மருத்துவமனை லிஃப்ட்டுக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேளர மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் (59) மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவர் மருத்துவமனையின் முதல் தளத்திற்கு செல்வதற்காக லிஃப்டில் ஏறியிருக்கிறார்.
அதன் பிறகு அந்த லிஃப்ட் வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் லிப்ட்டுக்குள்ளே சிக்கி தவித்துள்ளார். உதவிக்காக கூச்சலிட்டும் அது யாருக்கும் தெரியவில்லை. மேலும் அவரது கைப்பேசியும் சுவிட்ச் ஆஃப்பாகியுள்ளது.
பின்னர் திங்கள்கிழமை காலை லிஃப்ட் ஆபரேட்டர் வழக்கமான பணிக்காக அந்த லிஃப்ட்டை இயக்கியபோது ரவீந்திரன் லிப்ட்டினுள் சிக்கியிருந்தது தெரியவந்தது. 59 வயதுடைய ஒருவர் இரண்டு நாட்களாக லிஃப்ட்டுக்குள் இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ரவீந்திரன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.