கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் விடுதலை

கவுகாத்தி,

அரியானா மாநிலம், குருக்ஷேத்ராவின் கான்பூர் கோலியான் கிராமத்தில் வசித்து வந்த 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங், கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விரிவான விசாரணை நடத்தி, கடந்த 2007ல் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் 2021 அக்டோபர் 8ம் தேதி அன்று, ரஞ்சித் சிங் கொலை வழக்கு தொடர்பாக ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளிகள் என பஞ்ச்குலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு குர்மீத் ராம் ரஹீமுக்கு ரூ.31 லட்சமும், மற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குர்மீத் ராம் ரஹீம் தரப்பில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்வர் தாக்கூர், லலித் பத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தவிர, தனது இரண்டு சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம், தற்போது அரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சத்ரபதி கொலை வழக்கிலும் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை அனுபவிக்க உள்ளார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்