கொல்கத்தாவில் போராட்டம்: போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து மாணவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதுமே இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. உச்சநீதிமன்றம், மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் கொல்கத்தாவில் மாணவர் சங்கம் இன்னும் போராட்டத்தைக் கைவிடவில்லை, நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தற்போது வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

குரங்கு அம்மை: 200 மருத்துவர்களுக்குப் பயிற்சி – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்த நிலையில் மேற்கு வங்க மாணவர்கள் சங்கம் மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ளது. இதனால் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர் பேரணி இன்று(செவ்வாய்க்கிழமை) நபன்னா பகுதியை அடைவதால், அங்கு மட்டும் 2,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

மாணவர் சங்க பேரணி இன்று ஹவுரா பாலத்தை அடைந்தது. அங்கு காவல்துறையினர் தடுப்புகளை வைத்திருந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் அந்த தடுப்புகளை கடந்து செல்ல முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் நீடித்து வருவதால் அங்கு பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!