கொல்கத்தா விவகாரம்: அக். 15-ல் நாடு தழுவிய உண்ணாவிரதம்!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அக். 15 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு இன்று (அக். 13) அறிவித்தது .

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த ஒருநாள் உண்ணாவிரத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தில் மருத்துவர்கள்

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்… உயிரின் விலை என்ன?

மருத்துவர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், செப். 16-ல் மருத்துவக் குழுவுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அதில் மருத்துவர்கள் கோரிக்கை முழுகையாக ஏற்கப்படவில்லை.

இதனால் மருத்துவர்கள் போராட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாறியது. இன்றுடன் 9வது நாளாக இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்து வருகிறது.

நாடு தழுவிய உண்ணாவிரதம்

நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அக். 15 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்திய மருத்துவ கூட்டமைப்பின் இளநிலை மருத்துவக் குழு மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் இந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் வழிநடத்தப்படும்.

அக். 15, செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மருத்துவக் கூட்டமைப்பினர் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இதையும் படிக்க | நோபல் பரிசுக்குப் பிறகு… 3 நாள்களில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனை!

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் இளநிலை மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 9வது நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 3 மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மக்கள் ஒத்துழைப்பும் உள்ளது. மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்க முதல்வருக்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது