கோவையின் குலதெய்வம் தண்டு மாரியம்மன்

தண்டு மாரியம்மன் கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து அவினாசி சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அன்னை அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில்.

முகப்பில் அழகிய மூன்று நிலை ராஜகோபுரம். ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்ளன.

அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார பாலகிகள் அருள் பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில், புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள் பாலிக்கிறாள்.

அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்களில் சுதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடனும் அன்னை அருள் பாலிக்கிறாள். தனது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் அன்னை காட்சி தருகிறாள்.

அன்னையின் தேவக்கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராஜ கணபதியும், எருமை தலைமீது வெற்றிக் களிப்புடன் துர்க்கையும், தென் பகுதியில் தட்சிணா மூர்த்தியும், மேற்கு பகுதியில் மகாலட்சுமியும் பால முருகனும் அருள் பாலிக்கின்றனர்.

நுழைவாயிலில் மகிஷாசுர மர்த்தினியும், கஜலட்சுமியும், சரஸ்வதியும், லட்சுமியும் அருள் பொங்க காட்சி தருகின்றனர்.

அன்னையின் விமானத்தில் சமயபுரம் மாரியம்மன், காமாட்சியம்மன், விசாலாட்சி, சரஸ்வதி, கருமாரியம்மன், தனலட்சுமி, அயன மாரியம்மன், காயத்திரி, கோமாரி, லட்சுமி, தண்டு மாரியம்மன் ஆகியோர் திருமேனிகள் அழகுற கொலுவிருக்கின்றன.

அன்னையின் சன்னதிக்கு மேற்கு திசையில் அரச மரத்தின் கீழ் கற்பக விநாயகர் அருள் பாலிக்கிறார். கிழக்குப் பகுதியில் நவக்கிரக நாயகர்கள் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்குப் பகுதியில் கருப்பராயன் மற்றும் முனியப்பன் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.

தண்டு மாரியம்மனின் தலவரலாறு என்ன?

'தண்டு' என்ற சொல்லுக்கு படை வீரர்கள் தங்கும் கூடாரம் என்று பொருள். ஒரு சமயம் திப்பு சுல்தானின் படை வீரர்கள் கோவை கோட்டை மதிலுக்குள் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்படை வீரர்களில் ஒருவனின் கனவில் அன்னை ஒரு நாள் காட்சி அளித்தாள்.

நீர் சுனையும், வேப்ப மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருந்த அந்தப் பகுதியில் காட்சியளித்த அன்னையின் உருவம், அந்தப் படைவீரனின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. தூக்கம் கலைந்து எழுந்தான் அந்த வீரன். சுற்றிலும் காட்டுப் பகுதி. அந்த கும்மிருட்டில் அவன் எங்கு போய் அன்னையைத் தேடுவான்?. விடியும் வரை காத்திருந்தான். பொழுது விடிந்தது. தனது நண்பர்களுடன் அந்த அடர்ந்த காட்டில் அன்னையை தேடி அலைந்தான். அவனது அலைச்சல் வீண் போகவில்லை. ஒரு வேப்ப மரத்தின் அடியில் அன்னையைக் கண்டான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உவகை மிகுதியால் ஆனந்தக் கூத்தாடினான்.

அங்கேயே ஒரு மேடை அமைத்து அன்னை தண்டு மாரியை எழுந்தருளச் செய்தான். அன்னையின் அருள் மக்களிடையே பரவத்தொடங்கியது. புகழும் பெருகத் தொடங்கியது. அதே இடத்தில் அன்னைக்கு ஆலயம் அமைத்தனர். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் களைந்து அன்னை அன்று முதல் அருள் பாலித்து வருகிறாள்.

கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில், அன்னைக்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கின்றன. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயத்தின் தலவிருட்சம் தொரட்டி மரம்.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமையன்று பூச்சாட்டுடன் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

விழாவின் மூன்றாம் நாள் திருவிழாவின்போது அன்னைக்கு அக்னிச் சாட்டு விழா நடைபெறும். அன்று மாலை 6.30 மணியளவில் அக்னி சட்டியை அம்மனின் திருமலர் பாதங்களில் வைத்து அக்னி சட்டியில் அக்னி வளர்க்கப்படும். அக்னி சட்டியில் எரியும் அனல் நெருப்பில் அன்னை ஜோதி சொரூபியாய் அருள்பாலிக்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விழாவின் நான்காம் நாள் மற்றும் எட்டாம் நாட்களில் நடைபெறும் திருவிளக்குப் பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.

இந்தத் திருவிழாவின் முக்கியமான திருவிழா 'சக்தி கரகம்' ஆகும். அன்று காலை ஆறு மணிக்கு கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு கோணியம்மன் திருக்கோவிலிருந்து 'சக்தி கரகம்' புறப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரங்களில் தீச்சட்டி ஏந்தி சக்தி கரகத்துடன், பக்தி பரவசத்துடன் வருவார்கள்.

திருவிழாவின் 11-வது நாளன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழ் முறை லட்சார்ச்சனை மிகவும் சிறப்பாக அன்னைக்கு நடைபெறும்.

அன்று அன்னைக்கு பலவித நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பலவித மலர்களால் அன்னைக்கு அலங்காரமும் நடைபெறும்.

இதுதவிர, நவராத்திரி 10 நாட்கள், ஆடி வெள்ளிக்கிழமைகள், மார்கழி 30 நாட்கள், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு நாட்கள் ஆகிய நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவதில்லை.

நோய் அணுகாத நல் வாழ்வை தன் பக்தர்களுக்கு அளிப்பதில் அருள்மிகு தண்டு மாரியம்மனுக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்