இந்தோ – பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
க்வாட் மாநாட்டை இந்தியா நடத்த விருப்பம்
மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
பதற்றமும் பல்வேறு விதமான பிரச்னைகளும் உலகை சூழ்ந்திருக்கும் நேரத்தில் க்வாட் உச்சி மாநாடு நடக்கிறது.
ஜனநாயக அடிப்படையில் க்வாட் உறுப்பு நாடுகள் செயல்படுவதில் மகிழ்ச்சி. இந்தோ – பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம்.
பயங்கரவாத செயல்களுக்கு எதிராக க்வாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விரும்புகிறோம். சர்வதேச விதிகளை மதித்து அனைத்து பிரச்னைகளிலும் அமைதியான தீர்வுகளுக்கு ஆதரவு தருகிறோம் என மோடி குறிப்பிட்டார்.
மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
க்வாட் உச்சி மாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“டெலாவேர் வில்மிங்டனில் இன்று (செப்.22) நடைபெற்ற க்வாட் உச்சி மாநாட்டின் போது தலைவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய நலனுக்காக க்வாட் தொடர்ந்து எவ்வாறு பணியாற்றும் என்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தது. சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என மோடி பதிவிட்டுள்ளார்.
இந்தியா உடனான உறவு வலுவுடன் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார்.