சவுக்கு சங்கர் வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி,

யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்தகி, சவுக்குசங்கர் நீதிபதிகளுக்கு எதிராகவும்கூட அவதூறு கருத்துக்களை பரப்பியவர். நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர் எனக் கூறியவர் என்றார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன், சவுக்கு சங்கர் தொடர்பான ஒரே காணொளி பல தருணங்களில் ஒளிபரப்பப்பட்டதற்காக 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஏற்கெனவே நிலுவை வழக்குடன் இந்த வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான அனைத்து எப்.ஐ.ஆர்.-களையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க முடியாது. ஒவ்வொரு எப்.ஐ.ஆரும் வேறு விதமாக உள்ளன. அதேநேரம் அவரை மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது ஏன் என்பது குறித்தும், அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக ஏன் விசாரணை செய்யக்கூடாது என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு மற்றும் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்த மனுவின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை சிறையில் போதுமான புத்தகங்கள் இருப்பதால், மீண்டும் தன்னை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாகவும் வரும் 9-ம் தேதியன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts

Mumbai Rains: Heavy Downpour Causes Severe Disruptions In Local Train Services, Stranding Commuters Amid Waterlogging; Visuals Surface

Won’t Bow To Bajarbunge’: Uddhav Thackeray’s Fiery Attack On Amit Shah’s Maharashtra Visit

Mumbai: Activist Calls For Action Against Schools Not Following New Safety Guidelines