சாத்தூர் வெடி விபத்து: ஆலை உரிமையாளரின் மகன் கைது!சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளரின் மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளரின் மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் இன்று (ஜூன் 29) காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு தயாரிப்பு அறைகளும் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆலையில் ரசாயனப் பொருள்கள் உரசியதால் வெடி விபத்து ஏற்பட்டதாக காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர் சகாதேவன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரின் மகன் குருசாமி பாண்டியனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மு.க. ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளார்.