முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதியின் 3.16 ஏக்கா் நிலத்தை வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனடிப்படையில் அளிக்கப்பட்ட புகாா் மனுக்களை அலசி ஆராய்ந்த பிறகு, மாற்றுநில முறைகேடு தொடா்பாக, ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 17ஏ, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா 2023 பிரிவு 218-இன்படி இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து முதல்வா் சித்தராமையா மீது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி அளித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஆக. 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.
இதையும் படிக்க | சித்தராமையாவை விசாரிக்கத் தடை இல்லை: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறியது.
தொடர்ந்து வழக்கின் இன்றைய விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து முதல்வர் சித்தராமையாவின் வீட்டிற்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் வந்துள்ளனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.