சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, தாக்கிய விவகாரம்: சிபிசிஐடி விசாரணை!

வேலூர் மத்திய சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்திய விவகாரத்தில் வேலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி மற்றும் மத்திய சிறை ஜெயிலர், போலீசார் மற்றும் கைதிகளிடம் சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதியான கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமாரை சிறைத் துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி, தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து சென்னை சிபிசிஐடி போலீஸார் வேலூர் மத்திய சிறையில் விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார்(30) என்பவர் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டில், வீட்டு வேலைகளை செய்ய சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது ரூ.4.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கைதி சிவக்குமார் திருடியதாக குற்றச்சாட்டை முன்வைத்து சிறைத்துறை வார்டன்கள் கண்மூடித்தனமாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகன் சிறைத்துறை டிஐஜி வீட்டில் திருடியதாக சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து வார்டன்கள் சித்ரவதை செய்வதாகவும், எனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி வியாழக்கிழமை இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வு, ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் ரகுமான், சிறைத் துறை ஜெயிலர் உள்பட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி சிவக்குமாரை உடனடியாக சேலம் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை தொடர்பாக சிபிசிஐடி அறிக்கையை அரசிடம் வருகிற 17-தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை போலீஸ் காவலுடன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில், சென்னை சிபிசிஐடி போலீசார் வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி தனி பாதுகாப்பு அதிகாரி ராஜூ, சிறை போலீசார் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா தமிழ்ச்செல்வன், விஜி, பெண் போலீசார் சரஸ்வதி, செல்வி, சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது சட்டப்பிரிவு 146- சட்ட விரோதமாக கட்டாய வேலை வாங்குதல், 127 சட்ட விரோதமாக சிறை வைத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது குறித்து சிறையில் சென்று நேரடி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சிறைக்குள் சென்ற நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கே சிறை கைதிகளிடமும் மற்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறை வார்டன்களிடமும், போலீசாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

இது சம்பந்தமாக நேற்று சேலம் மத்திய சிறையில் கைதி சிவக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்