உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை சிறையிலிருந்து இன்று(செப்.25) மாலை வெளியே வந்தார் சவுக்கு சங்கர்.
‘யூடியூபா்’ சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று(செப்.25) உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டு ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
குண்டர் சட்டத்திலிருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு -உச்சநீதிமன்றம்
இதைத்தொடர்ந்து, மதுரை சிறையிலிருந்து இன்று மாலை வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: “என்னை ஒரு வருடத்திற்கு சிறையிலிருந்து வெளியே விடப் போவதில்லை என பகிரங்கமாக மிரட்டினார்கள். எனது உடலில் கை உள்பட 3 இடங்களில் எலும்புமுறிவு உண்டானது.”
”சவுக்கு மீடியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனது வீடும் சீல் வைக்கப்பட்டுள்ளது. எனது தாயாரின் பென்ஷன் கணக்கு உள்பட 6 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
நாட்டில் இன்று நடக்கும் உண்மைகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் தமிழக முதல்வரும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மிக கவனமாக இருக்கின்றனர்.
தமிழகத்தில் இந்த திராவிட மாடல் ஆட்சி எப்போது முடிவுக்கு வருமென மக்கள் காத்திருக்கின்றனர். சிறைக்கு செல்லும் முன் எனது செயல்பாடுகள் எப்படி இருந்ததோ, ஏற்கெனவே இருந்த அதே வீரியத்துடன் தொடர்ந்து செயல்படுவேன்” என்றார்.