மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நெஞ்சக நோய்த் தொற்று காரணமாக சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீதாராம் யெச்சூரி காலமானார்
உடல் தானம்
சீதாராம் யெச்சூரியின் மறைவையடுத்து அவரது உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீதாராம் யெச்சூரி(72) கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிமோனியா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இன்று(செப். 12) பிற்பகல் 3.05 மணிக்கு மறைந்தார். மருத்துவக் கல்விக்காகவும் ஆய்வுக்காகவும் அவரது குடும்பத்தினர் அவரது உடலை தானமாக அளித்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீதாராம் யெச்சூரி மறைவு: ராகுல் காந்தி இரங்கல்!
சீதாராம் யெச்சூரி
ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட சீதாராம் யெச்சூரி, 1952 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆந்திரம், தில்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, தில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் எம்ஏ முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டார்.
1974 ஆம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்த யெச்சூரி, 1975 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். படிப்படியாக முன்னேறி, கட்சியின் பொதுச்செயலராக உயர்ந்தார். மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் பியூரோ என பல்வேறு உயர் பொறுப்புகளையும் சீதாராம் யெச்சூரி வகித்துள்ளார்.
இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! – சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்
உடல்நிலை பாதித்திருந்தபோதும், தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார்.
2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுகள், சீதாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு முக்கிய தலைப்புகளில் உரையாற்றி, மக்கள் பிரச்னைகளை அவைக்குக் கொண்டு வந்துள்ளார்.
பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஏராளமான புத்தகங்களையும் சீதாராம் யெச்சூரி எழுதியிருக்கிறார்.
இந்தியா கூட்டணி அமைவதில் இவரது பங்கு முக்கியமானது.