சீமானை கைது செய்யக் கோரி மதுரை காந்தி மியூசியத்தில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் கைது  

சீமானை கைது செய்யக் கோரி மதுரை காந்தி மியூசியத்தில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் கைது

மதுரை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி, மதுரை காந்தி மியூசியத்தில் தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காந்தி மியூசியம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், காந்தியவாதிகள் வந்து செல்லும் புனித இடமாகவும் திகழ்கிறது. பள்ளிக் குழந்தைகளும் காந்தியைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அதிகளவு இங்கு வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில சுற்றுலாப்பயணிகள், தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயிரக்கானோர் இங்கு வந்து செல்கிறார்கள்.

மத்திய, மாநில அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், மதுரை வரும்போது, காந்தி அருங்காட்சியகத்திற்கு வந்து செல்கிறார்கள். அதனால், பாதுகாப்பு கருதி, போராட்டங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த இங்கு அனுமதி கிடையாது. இந்நிலையில், இன்று காந்தி மியூசிய வளாகத்தில் முன்அறிவிப்பு இல்லாமல் காந்தி சிலை முன்பு திடீரென்று மதுரை வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ஆர்.கனகவேல் என்பவர், உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அப்போது அவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி கோஷமிட்டார். அவரது திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தால் காந்தி மியூசிய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை வேடிக்கை பார்க்க, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அங்கு திரண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த காந்தி மியூசிய நிர்வாகிகள், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தல்லாகுளம் போலீஸார் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஆர்.கனகவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஆர்.கனகவேல், ''சீமான், சமீப காலமாக அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும், காவல் துறையினரையும், அரசு அதிகாரிகளையும் தரம் தாழ்ந்து விமர்ச்சித்து வருகிறார். சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்துப் பாடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருனை கைது செய்தபோது, 'அதே பாடலை நான் பாடுகிறேன், தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள்' என்று காவல் துறையினரை ஏளனம் செய்தார்.

ஓர் அரசியல் கட்சித் தலைவர் இப்படி நடந்து கொள்ளலாமா? தற்போது ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரையும் காக்கிச் சட்டையை கழட்டிவிட்டு வருமாறு தரம் தாழ்ந்து பேசியுள்ளார். போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதால் கடந்த 3 நாட்களாக இன்னும் தரம் தாழ்ந்து எல்லோரையும் விமர்சிக்க தொடங்கி உள்ளார். ஆகவே அவரை கைது செய்ய வேண்டும்'' என்றார்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்