சுவர் இடிந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு: மேல்முறையீடு செய்த அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம்

சுவர் இடிந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு: மேல்முறையீடு செய்த அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம்

மதுரை: இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் சுவர் இடிந்து விழுந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்த அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருவாதவூரில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் அதிபதி. இவரது 11 வயது மகள் சரண்யா, 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், 2014 மே 12-ம் தேதி வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சரண்யா உயிரிழந்தார். இதற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அதிபதி வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த தனி நீதிபதி, “மறுவாழ்வு முகாமில் அரசு கட்டிக் கொடுத்த வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்துள்ளார். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள், “கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் கொடுக்க அரசிடம் நிதி உள்ளது. ஆனால், சுவர் இடிந்து விழுந்து குழந்தை இறந்ததற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கொடுக்குமாறு கூறினால், அதற்கு மனமில்லாமல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை சிறுமியின் தந்தைக்கு வழங்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்