ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மற்றும் அந்த நாட்டுடன் தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஏடன்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 9 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அந்த நாட்டுடன் தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏமன் நாட்டுக்கு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகை சரக்கு கப்பல் மீது மோத செய்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு என்ன ஆனது? அதில் உள்ள மாலுமிகளின் கதி என்ன? என்கிற தகவல்கள் தெரியவில்லை.