செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணையை தொடர்ந்து நடத்த அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் அனுமதி

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணையை தொடர்ந்து நடத்த அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் அனுமதி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவையும் மேற்கொண்டது.

சாட்சி விசாரணைக்காக இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறைதரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர், ‘‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கிவிட்டது. முதல் சாட்சியிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்துவதற்காக விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘சாட்சி விசாரணை தொடங்கிய பிறகு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் மனுவை எப்படி பரிசீலிக்க முடியும், எனகேள்வி எழுப்பினர். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் எம்.கவுதமன், என்.பரணிக்குமார் ஆகியோர், ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை எப்போது வேண்டுமென்றாலும் வழக்கில் இருந்துவிடுவிக்கக் கோரி மனு தாக்கல்செய்யமனுதாரருக்கு சட்டப்பூர்வமாக உரிமை உள்ளது. இந்தவழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகவுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கவேண்டும்" என்றனர்.

அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கு விசாரணையை ஆக.28-க்கு தள்ளிவைத்தனர். மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரவும் அமர்வுநீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்