செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 55-வது முறையாக நீட்டிப்பு

வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 22-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

சென்னை,

செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் பணி பெற்று தருவதாக பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.

இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது.

இந்த குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சாட்சிகளின் குறுக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் முதல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் குறுக்கு விசாரணை நடத்தினார். அதற்கு செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா மற்றும் சகோதரர் அசோக் குமாரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை சாட்சிக் கூண்டில் நின்றவாறு பதில் அளித்தனர்.

அப்போது, வங்கி தலைமை மேலாளர் அளித்த பதில்கள் சிலவற்றுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் அசல் ஆவணங்கள் இல்லை என்றும், சில கூடுதல் ஆவணங்களை தற்போது புதிதாக தாக்கல் செய்து இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 55வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை