திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் என்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (அக். 16) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை படிப்படியாகக் குறைந்து இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால் அதி கனமழையில் இருந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் தப்பித்தது.
எனினும் இந்த மாவட்டங்களில் மிதமான மழை தொடர்ந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? இனி இதுதான் நடைமுறை!
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், இன்றைய வானிலை குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் வரவிருக்கும் நாள்களிலும் ஆங்காங்கே சாதாரண மழையே பெய்யும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும். வட தமிழ்நாடு மற்றும் அதன் உள்பகுதிகளில் வருகிற அக். 18 ஆம் தேதி வரை மழை இருக்கும்.
எனவே, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கமான பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மற்ற வட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.