சென்னை அம்மா உணவகங்களில் 2 நாள்களுக்கு இலவச உணவு! முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.

பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 100 உணவு தயாரிப்பு கூடங்களில் இன்று காலை வரை 7.18 லட்சம் மக்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை. எளிய மக்களுக்கு இரண்டு நாள்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை காலை அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : காற்றழுத்த மண்டலம் எங்கே கரையைக் கடக்கும்? வானிலை மையம் தகவல்

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில்,

“நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது