சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை: பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் ஒரு யூடியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கண்டறிந்து, விசாரணை செய்தனர்.

இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஹமீது உசேன், அவர் சகோதரர் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனர். கெளரவ பேராசிரியராக பணியாற்றி வந்த ஹமீது உசேன், ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்க ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவந்தது.

என்ஐஏ வழக்கு:

இந்த வழக்குத் தொடர்பாக 10 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். முக்கியமான ஆவணங்களை கைப்பற்றினர். சைபர் குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கில், தேச விரோத செயலுக்குரிய சட்டப்பிரிவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்ததால் வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு விரைவில் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏனெனில் இச் சட்டப்பிரிவுகளை ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டால், அந்த வழக்கின் விசாரணையை என்ஐஏ நேரடியாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு அண்மையில் மாற்றப்பட்டு, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சென்னை என்ஐஏ அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.

என்ஐஏ சோதனை:

சர்வதேச தொடர்புகள் இந்த வழக்கில் இருப்பதாக என்ஏஐ சந்தேகிப்பதால், விரைவில் இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் 9 இடங்கள் உள்பட தமிழ்நாட்டில் 14 இடங்களில், இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பல மணி நேரமாக நடைபெறும் இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.

சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட பேரவைத் தோ்தல்: 26 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு