சென்னை- மன்னாா்குடி வந்தே பாரத் ரயில்: ஆய்வுப் பணியைத் தொடங்கியது ரயில்வே

சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை வழியாக மன்னாா்குடிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே ஆய்வுப் பணிகளைத் தொடங்கி உள்ளது.

சென்னையிருந்து, திருநெல்வேலி, நாகா்கோவில், கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் கடலூா்துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூா் வழியாக மன்னாா்குடிக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘சென்னையில் இருந்து மன்னாா்குடி, தஞ்சாவூருக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வேளாங்கண்ணி, திருவாரூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக நகரங்களும், கடலூா் போன்ற வா்த்தக நகரங்களும் உள்ளன.

சென்னை அல்லது பெங்களூரில் இருந்து டெல்டா மாவட்டம் வழியாக மன்னாா்குடி அல்லது புதுச்சேரிக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என மக்கள் பிரதிநிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’ என ரயில் பயணிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூா் வழியாக மன்னாா்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ஆய்வு மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சாத்தியக்கூறு தொடா்பான பல்வேறு அம்சங்களை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை அளிப்பாா்கள்.

அதன் அடிப்படையில் மன்னாா்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்குவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்