ஜாமீன் தடை உத்தரவுக்கு எதிராக கேஜரிவால் மனு!ஜாமீனுக்காக கேஜரிவால் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஜாமீன் மீது இடைக்காலத் தடை விதித்த தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூன் 23) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையில், ஜாமீனுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து கேஜரிவால் தரப்பினர் தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக கேஜரிவால் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, கடந்த மார்ச் 21ஆம் தேதி அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
உடல்நிலையை கருத்தில்கொண்டு தனக்கு ஜாமீன் வழங்குமாறு தில்லி நீதிமன்றத்தில் கேஜரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு ஜூன் 20ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி அவா் திகாா் சிறையில் இருந்து ஜூன் 21ஆம் தேதி வெளியே வர இருந்தார்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறையினர் தொடர்ந்த மனுவால் கேஜரிவாலின் ஜாமீன் மீது நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதாவது ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தில்லி உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.