ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பயி சோரன், அனைத்து பதவிகள் மற்றும் முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பயி சோரன் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அனைத்து பதவிகள் மற்றும் முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாகவும், பழங்குடியினர், தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரச்னைகளில் தனது போராட்டம் தொடரும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று, பாஜகவில் சேருவதாக அறிவித்த சம்பயி சோரன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையின் மீது நம்பிக்கை வைப்பதாக தெரிவித்திருந்தார்.
சம்பயி சோரன் பாஜகவில் சேரும் முடிவை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், நமது நாட்டின் புகழ்பெற்ற பழங்குடியினத் தலைவருமான சம்பயி சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (ஆக.28) இரவு சந்தித்தார்.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி ராஞ்சியில் அவர் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைவார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.