தமிழகத்திற்கு டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள்!
"டிரில்லியன்ட் (Trilliant) நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவிட 2000 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டேன். இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி!
நைக்கி (Nike) உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு, உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டேன்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆப்டம் (Optum) நிறுவனத்தில் 5,000 பேர் வேலை செய்து வரும் நிலையில், அந்நிறுவனம் சுகாதாரத் துறைக்கான திறமையாளர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். முன்னெடுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.