டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பரை தேர்வு செய்த கவாஸ்கர்.. யார் தெரியுமா..?

வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டி மட்டுமின்றி ஐபிஎல் தொடரின் கடைசி பகுதியிலும் சஞ்சு சாம்சன் அசத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து அசத்தினார். ஆனால் மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட சஞ்சு சாம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

முன்னதாக சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே ஐபிஎல் தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து நல்ல பார்மில் உள்ளனர். எனவே விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற குழப்பமும் காணப்பட்டது. ஆனால் இந்த பயிற்சி போட்டியில் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டான நிலையில் ரிஷப் பண்ட் 53* ரன்கள் அடித்து அசத்தினார். எனவே விக்கெட் கீப்பர் தேர்வில் சாம்சனை விட ரிஷப் பண்ட் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியை தாண்டி ஐபிஎல் தொடரின் கடைசிப் பகுதியிலும் சஞ்சு சாம்சன் அசத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே உலகக் கோப்பை போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"விக்கெட் கீப்பிங் திறமையை ஒப்பிட்டு பார்க்கும்போது சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட் சிறந்தவராக இருக்கிறார். இங்கே நாம் பேட்டிங்கை பற்றி பேசவில்லை. இந்த விவாதத்தில் பேட்டிங் திறமையும் வரும். அது போன்ற சூழ்நிலையில் கடந்த சில போட்டிகளாக ரிஷப் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்தார். மறுபுறம் சஞ்சு சாம்சன் அனைத்து திசைகளிலும் அடித்து பெரிய ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரை சிறப்பாக துவங்கினார். ஆனால் கடைசி 2 – 3 முக்கியமான போட்டிகளில் அவர் ரன்களை அடிக்கவில்லை. எனவே வங்கதேசத்துக்கு எதிராக அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை அவர் அந்த வாய்ப்பில் 50 – 60 ரன்கள் அடித்திருந்தால் எந்த கேள்வியும் இருந்திருக்காது. ஆனால் தற்போது இந்திய தேர்வுக்குழு ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுப்பார்கள்" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா