டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அசத்த விராட் கோலி கொடுத்த அட்வைஸ் பெரிதும் உதவியது – அக்சர் படேல்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாமல் திகைத்து நின்ற நேரத்தில் விராட் கோலி கூறிய ஆலோசனைகள் உதவியதாகவும் அக்சர் படேல் கூறியுள்ளார்.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. அந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

இதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 34 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது 4வது இடத்தில் களமிறங்கிய அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பொதுவாக 6 அல்லது 7-வது இடங்களில் விளையாடக்கூடிய அவர் பைனலில் முன்கூட்டியே வந்து விராட் கோலியுடன் சேர்ந்து சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்தினார்.

இந்நிலையில் அப்போட்டியில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட் விழுந்ததும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர்தான் தம்மை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பியதாக அக்சர் படேல் கூறியுள்ளார். அதே போல பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாமல் திகைத்து நின்ற நேரத்தில் விராட் கோலி கூறிய ஆலோசனைகள் உதவியதாகவும் அக்சர் படேல் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் அவுட்டானபோது என்னுடைய பின்புறத்தில் நின்று கொண்டிருந்த ரோகித் பாய் பேட்டிங் செய்யத் தயாராகுமாறு சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் என்னிடம் ஓடி வந்த சஹால் பயிற்சியாளர் ராகுல் பாய் பேட்டிங் செய்வதற்கு தயாராகுமாறு சொன்னதாக சொன்னார். ஆனால் அப்போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் 2 விக்கெட்டுகள் விழுந்த பின்பும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் சூர்யகுமாரும் அவுட்டானார். அப்படி அனைத்து விஷயங்களும் திடீரென நடந்ததால் எதைப் பற்றியும் யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

அப்போது களத்திற்கு சென்ற என்னிடம் 'எதற்காகவும் பதறாமல் பந்தை பார்த்து அடி' என்று ஹர்திக் பாண்ட்யா குஜராத்தி மொழியில் சொன்னார். அது என்னுடன் ஒட்டிக்கொண்டது. அதன் பின் நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தபோது விராட் பாய் தொடர்ந்து என்னை வழி நடத்தினார். குறிப்பாக 'உன்னால் அடிக்க முடியும் என்று நினைக்கும் பந்துகளை விட்டு விடாதே' என்று விராட் சொன்னார். அந்த வகையில் அனைவரும் என்னை தொடர்ந்து வழி நடத்தியது சிறப்பாக விளையாட உதவியது. அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறாக மாறியது" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா