இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
சென்னை,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
கூட்டணி கட்சிகள் மொத்தம் 52 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய ஆட்சி அமைக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.