தந்தை மறைவால் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து கராச்சிக்கு திரும்புவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான மகளிர் டி 20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
வியாழன் காலை பாத்திமாவின் தந்தை இறந்ததை அடுத்து, முதல் விமானத்தில் பாத்திமா சனா நாடு திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் துணை கேப்டன் முனீபா அலி தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கிறது.
22 வயதான பாத்திமா சனா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். மேலும் அவர் இல்லாதது அணிக்கு பேரிழப்பாக இருக்கும்.
ஏனெனில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒன்றில் வெற்றிபெற வேண்டும்.
இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தற்போது குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி வருகிற திங்கட்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.