தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 25-ம்தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.20) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21 முதல் 25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் பொன்னை அணையில் 10 செமீ, சென்னை மாதவரத்தில் 7 செமீ, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, சென்னை கொளத்தூர் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, சென்னை திரு.வி.க.நகர், புழல், வானகரம், மணலி, அம்பத்தூர், வில்லிவாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

அறக்கட்டளையில் சேர்த்து பரிசு தருவதாகக் கூறி பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் – மக்கள் குற்றச்சாட்டு