ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் 42 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி உருவெடுத்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை முறையே ஆறு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளதால் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகளில் நான்கு பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கட்சியின் பலம் 46-ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா இன்று(அக்.16) பதவியேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க:விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம்: ஒமர் அப்துல்லா
இந்த நிலையில், ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஒமர் அப்துல்லாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!’
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால், மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவிருந்ததன் காரணமாக தன்னால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தன் சார்பாக திமுக எம்.பி. கனிமொழி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதையும் பதிவிட்டுள்ளார்.
மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இந்தியாவின் தென் முனையில் உள்ள தமிழகமும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரும் உரக்கக் குரலெழுப்பும் என்றும், இணைந்து பயணித்து வெற்றி காண்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? – மு.க. ஸ்டாலின் பேட்டி