தமிழக மீனவர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர்

தமிழக மீனவர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர்

ராமேசுவரம்/சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர். கடந்த ஜூன் 30-ம் தேதி பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கென்னடி, தாஸ், அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசைராஜ் உட்பட 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். மேலும், நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 விசைப் படகுகளையும், அவற்றில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் மீதான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் 8-ம்தேதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேரும் மீண்டும் இலங்கைகடல் பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனையின்அடிப்படையில் விடுதலை செய்தும், படகை நாட்டுடைமையாக்கியும் நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தஒரு விசைப்படகில் இருந்த 4 பேரில் 2 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம், அந்த படகின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது விசைப்படகில் இருந்த 5 பேரில் 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். விசைப்படகை ஓட்டி வந்த படகு உரிமையாளருக்கு அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட பாம்பனை சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் 13பேர் நேற்று முன்தினம் மாலைகொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

Related posts

ஹலோ கிட்டி… பிரியங்கா கோல்கடே!

இதழில் குறுநகை… யாஷிகா ஆனந்த்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – புகைப்படங்கள்