தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, ஜூன் 6, 2022 அன்று துர்கா பிரசாத் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் புகாரின்பேரில் கடந்த சில நாள்களாக ஸ்ரீகாந்தை போலீஸார் தேடிவந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் மதுரையில் கடந்த அக்.18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மதுரையில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு செல்வதற்கான அனுமதி கிடைத்தபின்னர், காவல்துறையினரால் ஆந்திரத்துக்கு ஸ்ரீகாந்த் அழைத்து வரப்பட்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முந்தைய அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் விஸ்வரூப். கடந்த 2022ல் கோனசீமா மாவட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பான வன்முறையின்போது அமலாபுரத்தில் உள்ள அவரது வீடு ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரும் அவரது குடும்பத்தாரும் வீட்டில் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் ஒரு மருத்துவர். எனக்கு உயிரைக் காப்பாற்ற மட்டுமே தெரியும். இந்த வழக்கில் தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

துர்கா பிரசாத் ஸ்ரீகாந்த்தின் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

தலித் இளைஞரின் கொலைக்கான காரணம் தெரியவில்லை. திட்டமிட்டு சதி செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீகாந்திடம் ஆந்திர போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!