தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக். 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

கடந்தஅக். 4-ஆம் தேதி மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாடு தொடா்பாக 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மாநாட்டுக்கு சில நாள்களே இருப்பதால், மாநாடு நடைபெறும் இடத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 50,000 பேர் இருக்கும்வகையில் இருக்கைகள், மழை பெய்தால் பாதிக்காதவண்ணம் ஒரு சில அடிகள் உயரத்தில் பலகைகள் போடப்பட்டு அதன் மேல் இருக்கைகள் வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திக்க 800 மீட்டர் தூரத்திற்கு நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங், கழிவறை, குடிநீர், மருத்துவம், தீயணைப்புத் துறை என அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது.

மாநாட்டுக்கான பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் பாதிக்கப்படுவதால் மாநாடு நடைபெறும் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, பாதுகாப்பு மற்றும் உடல்நலன் கருதி கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர், சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!