தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு: நீதிபதிகள் அதிருப்தி

தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சியில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரித்த ஐகோர்ட்டு, தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு நீர் கலப்பதை கூட அனுமதிக்க மாட்டோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உரிய அரசுத்துறைக்கு ரூ.100 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெல்லை மண்டல பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் அதிகாரி நேரிலும், நெல்லை மாநகராட்சி கமிஷனர் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் ஆஜராகி, தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒத்துக்கொண்டனர்.

இதனை பார்த்த நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா? பொதுப்பணித்துறை அதிகாரி, மாநகராட்சி அதிகாரி வீடுகளில் இதுபோல கழிவுநீர் சென்றால் இப்படி பார்த்துக்கொண்டு இருப்பார்களா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர்.

இதையடுத்து நீதிபதிகள், 7 நிறுவனங்கள் பாக்கித்தொகை குறித்தும், கழிவுநீரை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் பொதுப்பணித்துறை, நெல்லை மாநாகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

IND vs NZ, 2nd Test Preview: Wounded India Look To Bounce Back With Series On The Line In Pune

Akshay Kumar, Twinkle Khanna Make Stylish Appearance At Dimple Kapadia’s Go Noni Go Premiere In Mumbai (VIDEO)

IND vs NZ, Live Streaming & Broadcast Details: When, Where & How To Watch 2nd Test In Pune