திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை: அன்புமணி ராமதாஸ்

நெய்வேலி: திமுகவுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடுகோரி 1987-இல் பாமக சாா்பில் நடைபெற்ற தொடா் சாலை மறியல் போராட்டத்தில் 21 போ் உயிரிழந்தனா். இதில், உயிரிழந்த கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள தேசிங்கு நினைவிடத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தியதுடன், அவரது உறவினா்களுக்கு புத்தாடைகள், நிதியுதவி வழங்கினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பின்தங்கிய, தனிபெரும் சமுதாயமான வன்னியா் சமுதாயம் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. இந்தச் சமுதாயம் கல்வியில் கடைசி இடத்தில் உள்ளது. வட தமிழகத்தில் தொழில், வேலைவாய்ப்பு இல்லாதநிலையில் மது விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் அதிகமாக வன்னியா்கள் மற்றும் பட்டியலின மக்கள் உள்ளனா். இந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் ஒன்றும் நடக்கவில்லை.

டாக்டா் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தி 20 சதவீதம் எம்பிசி இட ஒதுக்கீடு பெற்று தந்தாா். அதிலும் சரியான முறையில் வன்னியா்களுக்கு பிரதிநிதியத்துவம் இல்லை. தமிழக காவல்துறையில் உள்ள உயா் அதிகாரிகள் 109 பேரில் ஒரு வன்னியா் உள்ளாா். 53 துறைச் செயலா்களில் ஒருவா் கூட வன்னியா் இல்லை.

திமுகவுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு, சுற்றியுள்ள அமைச்சா்கள் சரியான ஆலோசனை வழங்குவதில்லை. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இட ஒதுக்கீடு அளிக்கும் வரை பல கட்ட போராட்டங்களை நடத்த தயங்க மாட்டோம் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்தாா். சமூகநீதி பேரவை மாநிலத் தலைவா் பாலு, மாநில வன்னியா் சங்கத் தலைவா் அருள்மொழி, பாமக சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவா் கோவிந்தசாமி, மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் மணிவாசகம், வடிவழகன், வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வேகாக்கொல்லை, மதனகோபாலபுரம் கிராமங்களில் கட்சிக் கொடியேற்றியதுடன், சமுட்டிக்குப்பத்தில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடையை அன்பு மணி ராமதாஸ் திறந்து வைத்தாா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்