திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன். கடந்த 2020-ம் ஆண்டு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஜெகத்ரட்சகன் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது.

மேலும், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடுகளை செய்ததாக ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏற்கெனவே முடக்கப்பட்ட ரூ.89.19 கோடி சொத்துகளை தற்போது அமலாக்கத் துறை பறிமுதல் செய்து, அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கடந்த 2020-ம் ஆண்டு திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையை இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. இதில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பறிமுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, 2021-ம் ஆண்டு டிசம்பரில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர், தொடர்புடையை நிறுனங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறி பல்வேறு முதலீடுகள் செய்திருப்பதாக நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக, சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.42 கோடியும், இலங்கை நிறுவனத்தில் ரூ.9 கோடி முதலீடு செய்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, ஜெகத்ரட்சகன் 2020-ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி, ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. அந்த வகையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு விதி மீறல்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்