திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று(செப். 17) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
17.9.1949-இல் முன்னாள் முதல்வா் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்து தனது பவள விழாவை இன்று கொண்டாடுகிறது. இத்துடன் பெரியார், அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது.
திமுக பவள விழா ஆண்டின் சிறப்பாக நிகழாண்டு முதல், முதல்வர் ’மு.க.ஸ்டாலின்’ பெயரில் விருது வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரில் முதல்முறையாக விருது வழங்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு 'மு.க.ஸ்டாலின் விருதை' வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த விழாவில் கவிஞர் தமிழ்தாசனுக்கு 'பாவேந்தர் விருது' வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜனுக்கு 'பேராசிரியர் விருது' வழங்கப்பட்டது. எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு 'கலைஞர் விருது' வழங்கப்பட்டது. திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் அறந்தாங்கியைச் சேர்ந்த மிசா ராமநாதனுக்கு 'அண்ணா விருது' வழங்கப்பட்டது.