திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி

திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற தந்தை, மகன் உட்பட 3 பேர் மின்வேலியில் சிக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே முருகன் என்பவருடைய நிலத்தை குத்தகை எடுத்து நீதி என்பவர் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர், மலைப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வருவதை தடுக்க நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் (வயது 40) இவருடைய மகன் லோகேஷ் (வயது 14) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த கரிபிரான் (வயது 60) ஆகிய மூன்று பேர் நேற்றிரவு ஏலகிரி மலைப் பகுதிக்கு வனவிலங்குகளை வேட்டையாட சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது முருகன் என்பவருடைய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மிண்வேலியில் சிக்கி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து குரிசிலாப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று பேரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வனவிலங்குகளை வேட்டையாட எடுத்துச் சென்ற நாட்டு துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மின் வேலி அமைத்த நீதி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்