திருப்போரூர் முருகன் கோவில் தோன்றிய வரலாறு

திருப்போரூர் கந்தசுவாமி சுயம்புமூர்த்தியாக இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு, ஜவ்வாது போன்ற வாசனை திரவிய பொருட்கள் சாத்தப்படுகின்றன.

தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சி பீடத்தில் இருந்த நவாப் மன்னர்கள் முருகப்பெருமானுக்கு சிறப்புமிகு கோவிலை திருப்போரூரில் அமைக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலைகள் கோவில் கட்டும் எண்ணத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. இருந்த போதிலும் நவாப் மன்னர்களின் எண்ணத்தை செயல்படுத்த காரணகர்த்தாவாக இருந்தவர் ஆதிகுரு ஸ்ரீமத் சிதம்பரசுவாமி. இவர் இறைவழிபாட்டில் திளைத்து தியானம் செய்யும்போது அவரது கண்முன் முருகப்பெருமானின் வாகனமாகிய மயில் பறந்து செல்வது போலத் தெரிந்தது. திடீரென்று மயில்வாகனம் தோன்றி மறைந்ததால் சிதம்பரசுவாமி அதன் விவரத்தை குருபிரானிடம் சொல்லி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்.

மீனாட்சி அம்மனை வேண்டி தவம்

முருகப்பெருமானின் சூட்சுமத்தை தெரிந்துகொண்ட குருபிரான் நீ மதுரை சென்று மீனாட்சி அம்மனை வேண்டி தவம் செய். அப்போது உனக்கு தெளிவான பதில் கிடைக்கும், அதன்படி நீ தெய்வீக பணிகளை செய் என்றார். குருபிரானின் கட்டளையின் படி சிதம்பரசுவாமி மதுரைக்குச் சென்று அங்குள்ள மீனாட்சி அம்மனை நெஞ்சுருக வேண்டினார். 48 நாட்கள் உணவு, உறக்கம் இன்றி கடும் தவம் செய்தார். இருந்தபோதிலும் மீனாட்சிதேவியின் கருணை பார்வை விழவில்லை. பின்னர் அவளது புகழை கசிந்துருகி நாவினிக்க பாடினார்.

சிதம்பரசுவாமியின் உண்மையான பக்தியைக் கண்டு வியந்த மீனாட்சி அம்மன் அவரது கண்முன் தோன்றினார். அப்போது 'வடக்கு திசையில் புராண வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற யுத்தபுரி என்றும் அங்கு வாழ்கின்ற மக்களால் திருப்போரூர் என்று சொல்லப்படுகிற இடத்தில் எமது மைந்தன் முருகனுக்கு திருக்கோவில் அமைத்து வழிபடு' என சொல்லி மறைந்தார்.

யுத்தபுரி

அன்னை மீனாட்சியின் அருட்கட்டளையின் படி சிதம்பரசுவாமி மதுரையில் இருந்து வடக்கு திசையில் உள்ள யுத்தபுரி என்ற இடத்துக்கு வந்தார். யுத்தபுரி என்ற இடம் அடர்ந்த செடி, கொடிகளும் பனை மரங்களும் சூழ்ந்து இருந்தது. பல பகுதிகளில் முருகனுக்கு கோவில் அமைக்க உரிய இடம் கிடைக்காமல் தேடி அலைந்து சிதம்பரசுவாமி சோர்ந்து போனார். நிரந்தரமான இடத்தில் இருக்கவும் தம்மை தேடி அலைகின்ற தொண்டருக்கு அருள்பாலிக்க எண்ணிய முருகப்பெருமான் அடர்ந்த பனை மரங்களுக்கு இடையே ஒரு பனை மரத்தின் கீழ் சுயம்பு உருவில் புற்று மண்ணால் மூடிய நிலையில் காட்சி அளித்தார்.

தமது தேடலுக்கு வழி காட்டிய முருகபெருமானை சிதம்பரசுவாமி போற்றி வணங்கினார். அதன்பின்பு சுயம்பு வடிவில் தோன்றிய முருகப்பெருமானை எடுத்து வந்து வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகளை செய்து வழிபட்டார். தனக்கு கோவில் அமைக்காமல் வெறும் வழிபாடு மட்டும் செய்து வந்த சிதம்பர சுவாமிக்கு நினைவூட்ட திடீரென்று ஒரு நாள் சிதம்பர சுவாமியின் கனவில் வந்த முருகன் சுவாமியின் நெற்றியில் விபூதியை பூசி விட்டு மறைந்தார்.

கொள்ளை போன பணம்

அந்த நொடிப்பொழுதில் இருந்து தமக்கு எத்தகைய வடிவத்தில் திருக்கோவில் அமைக்கப்பட வேண்டும் என்பதை தத்ரூபமாக சிதம்பரசுவாமிக்கு முருகன் எடுத்துக்காட்டினார். தங்கள் குறை தீர்ந்த பக்தர்கள் சிதம்பர சுவாமிக்கு நன்கொடையாக பணத்தை வாரி வழங்கினார்கள். சிதம்பர சுவாமியிடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்த கொள்ளையர்கள் அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்றனர்.

திருப்பணிக்காக சேமித்து இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை எண்ணி முருகப்பெருமானிடம் சிதம்பர சுவாமி அழுது புலம்பினார். அழுது புலம்பிய சிதம்பர சுவாமிக்காக முருகன் கொள்ளையர்களின் பார்வையை பறித்தார். சுவாமியின் பணத்தை கொள்ளை அடித்ததால் தான் தங்களின் கண்பார்வை பறிபோனது என்பதை கொள்ளையர்களுக்கு முருகன் உணர வைத்தார். தங்களது செயலுக்கு மன்னிக்கும்படியும் எடுத்து சென்ற பணத்தை மீண்டும் ஒப்படைப்பதாகவும் சொல்லி சிதம்பரசுவாமியின் காலில் விழுந்தனர்.

பின்னர் அவர்கள் கொள்ளை அடித்த பணத்துடன் தமது சொந்த பணத்தையும் சேர்த்து வழங்கிவிட்டு சென்றனர். தமது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட கொள்ளையர்களுக்கு கண் பார்வை கிடைக்க சிதம்பர சுவாமி அருளினார். அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கெல்லாம் முருகப்பெருமானின் திருநீற்றை வழங்கி அவர்களை குணப்படுத்தினார். அதற்கு நன்றிக்கடனாக அந்த மக்கள் சுவாமிக்கு நன்கொடையாக பணத்தையும், பொருட்களையும் வாரி வழங்கினார்கள். இதனால் அவர்களது நன்கொடை பொருட்கள் மலை போல் குவிந்தன.

650 ஏக்கர் நிலம்

நவாப்பின் மகளுக்கு ஏற்பட்ட தீராத வயிற்றுவலி எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருளாலும் சிதம்பரசுவாமி குருவருளாலும் நீரில் தோன்றி மறையும் நீர்க்குமிழி போல காணாமல் போனது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நவாப் மன்னர், முருகன் கோவிலின் வளர்ச்சிக்காக சுமார் 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். தானமாக பெற்ற அந்த நிலத்தில் கந்தசுவாமி திருக்கோவில் கட்டும் பணியை செய்து முடித்தார். சுவாமிகள் திருக்கோயில் மடத்திலேயே தங்கி முருகனுக்கு பூஜை செய்து அழகு பார்த்தார். மண்ணில் புதைந்து கிடந்த இந்த கோவில் 17-ம் நூற்றாண்டில் மீண்டும் புதிதாக கட்டப்பட்டது.

திருக்கோவில் அமைப்பு

திருப்போரூர் முருகன் கோவிலில் முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் கோவிலுக்கு நுழையும் முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். அவரை வணங்கிய பின்னர் கந்தக்கடவுளை வணங்க ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு செல்லவேண்டும். கணநாதர் சன்னதியை சற்று தள்ளி ஆதிகுரு சிதம்பர சுவாமி சன்னதி உள்ளது. ராஜகோபுரம் நுழைவதற்கு முன்பு பெரிய வட்ட வடிவிலான மண்டபம் உள்ளது. இங்கு கொடி மரம், மயில் வாகனம், பலிபீடம் போன்றவை உள்ளன.

வட்ட வடிவ மண்டபம்

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் இல்லாத சிறப்பாக வட்ட வடிவ மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பலிபீடத்தின் முன்புறம் பிரார்த்தனையில் ஒன்றாக உப்பு, மிளகு போன்றவற்றை பக்தர்கள் கந்த பெருமானுக்கு காணிக்கை செலுத்துகின்றனர்.

வட்டவடிவ மண்டபத்தை கடந்து ராஜகோபுரம் 24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் முருகனின் மனைவியர்களில் ஒருவரான தெய்வானை சன்னதி உள்ளது. இதற்கு எதிர்பக்கம் உள்ள தூணில் முருகப்பெருமானின் கோவில் வளர்ச்சி பணிகளுக்காக 650 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஆற்காடு நவாப் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிற வில்வமாலை இங்கு கட்டப்படுகிறது. கடைகளில் விற்கப்படுகிற மற்ற மாலைகள் இங்கு அணிவிக்கப்படுவதில்லை.

இதற்கு எதிர்ப்பகுதியில் இத்திருக்கோயிலை உருவாக்கிய ஆதிகுரு சிதம்பரசுவாமி படம் அமைக்கப்பட்டுள்ளது. சுனை விநாயகரை வணங்கி வழிபட்டபின்னர் கருவறைக்கு செல்ல வேண்டும். கருவறையில் உள்ள முருகர் மற்றும் தெய்வானை ஆகியோர் பெண் பனைமரத்தின் அடியில் சுயம்பு திருவுருவில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தானாக தோன்றிய முருகர், வள்ளி, தெய்வானை ஆகிய சிலைகளுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்கு பதிலாக புனுகு, ஜவ்வாது போன்ற வாசனை திரவிய பொருட்கள் சாத்தப்படுகின்றன. எதிர் திசையில் பலிபீடமும் யானை வாகனமும் அமைந்துள்ளது. ஐராவதம் என்று அழைக்கப்படுகிற யானை வாகனத்தை தேவேந்திரன் தனது மகள் தெய்வானைக்காக சீதனமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. கிழக்கு திசையை நோக்கியுள்ள மூலவர் சன்னதியில் அபிஷேக ஆராதனைகளுக்காக முருகன், தெய்வானை மற்றும் வள்ளி சிலைகள் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூலவர் சன்னதிக்கு மிக அருகிலேயே ஸ்ரீசக்கர ஸ்தானம் என அழைக்கப்படுகிற ஸ்ரீசக்கர சன்னதி உள்ளது. இங்கு சிதம்பர சுவாமி தவம் செய்த இடமாகும். ஸ்ரீசக்கர சன்னதியில் வழிபாடு செய்து விட்டு வந்தால் மனக்கவலை எல்லாம் மாயமாய் பறந்தோடும். வேண்டுவதை நிறைவேற்றி தரும் பீடம் இங்கு அமைந்து உள்ளது.

தெப்போற்சவம்

கருவறையிலிருந்து வெளியே தெற்கு புறமாக உற்சவர் மண்டபம் உள்ளது. இங்குதான் உற்சவர் சிலைகளுக்கு பக்தர்களால் செய்யப்படுகிற அபிஷேக ஆராதனைகள் சுவாமி திருவீதி உலா போன்றவை நடைபெறுகிறது. ராஜகோபுரத்தின் உட்புற பகுதியின் பின்புறத்தில் வன்னியநாதர், விசாலாட்சி, நாகதேவதைகள் போன்ற சன்னதிகள் உள்ளன. இங்கு நவக்கிரகங்களுக்கு தனியாக சன்னதி இல்லை. அதே சமயம் சூரியன், சனி இரு கிரகங்களுக்கு மட்டும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.

கோவிலுக்கு முன்புறம் திருக்குளம் உள்ளது. அதன் நடுவில் நீராழிமண்டபம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் 8 கிணறுகள் உள்ளன. கோடை வறட்சி காலத்திலும் கூட இந்த குளம் வற்றாத நிலை உள்ளது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இந்த குளத்தில்தான் நடைபெற்று வருகிறது.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்