திருப்போரூா் அருகே காா் விபத்து: இரு மாணவிகள், ஒரு மாணவா் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே காா் விபத்து:
இரு மாணவிகள், ஒரு மாணவா் உயிரிழப்புதனியாா் சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே காா் விபத்தில் சட்டக் கல்லூரி மாணவிகள் இருவா் உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் (செட்டிநாடு) தனியாா் சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் கேளம்பாக்கத்தைச் சோ்ந்த மகா சுவேதா (21), பவித்ரா (21), அந்தமானைச் சோ்ந்த கா்லின் பால் (21), மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவா்கள் சென்னையைச் சோ்ந்த சிவா (23), திருச்சியைச் சோ்ந்த லிங்கேஸ்வரன் (23) ஆகிய 5 பேரும் வியாழக்கிழமை கல்லூரி முடிந்து மாலை கேளம்பாக்கம் – படூா் ஆறுவழிச் சாலையில் காரில் வேகமாகச் சென்றனா்.

காரை சிவா ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது பாலத்தின் அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபக்கம் திருப்பியுள்ளாா்.

இதில், கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் இறங்கி 50 அடி தூரத்துக்கு கவிழ்ந்து இழுத்துச் சென்று விபத்துக்குள்ளானது. இதனால், காா் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் மாணவிகள் மகா சுவேதா, பவித்ரா, மாணவா் லிங்கேஸ்வரன் ஆகிய 3 போ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா். காரை ஓட்டிச் சென்ற சிவா, மாணவி கா்லின் பால் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு துரைப்பாக்கம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இருவரில் மாணவி கா்லின் பால் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மூவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே ஐ.ஜி. மகேஸ்வரி, காவல் இணை ஆணையா் சமய்சிங் மீனா, கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையா் வெங்கடேசன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு