திருமண வீட்டில் ரூ.1¾ லட்சம் மொய் பணம் திருட்டு – கைவரிசை காட்டிய அக்கா, தங்கை கைது

திருமண வீட்டில் ரூ.1¾ லட்சம் மொய் பணத்தை திருடிய மதுரையைச் சேர்ந்த அக்கா, தங்கையை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மொய் பணமும் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்டு இருந்தவர்களிடம் சில்லறை கேட்பது போல 2 பெண்கள் வந்து பேச்சு கொடுத்துள்ளனர்.

திடீரென மொய் பணம் ரூ.1¾ லட்சத்துடன் இருந்த பணப்பெட்டியை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

திருமண மண்டபம் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அக்கா-தங்கையான முத்துச்செல்வி (54 வயது), பாண்டியம்மாள் (42 வயது) ஆகியோர்தான் மொய் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1¾ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி