தில்லியில் காற்று மாசு 45% குறைவு: என்ன காரணம்?

தில்லியில் காற்று மாசுபாடு 45% குறைந்துள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் நலத் துறை அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான கோபால் ராய் இன்று (செப். 1) தெரிவித்தார்.

24 மணிநேர மின்சாரம், மின்னணுப் பேருந்துகள் என ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட நீண்டகால நடவடிக்கையின் எதிரொலியாக காற்று மாசு குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தலைநகரான தில்லியில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் கோபால் ராய் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''தில்லியில் ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டுமுழுவதும் இருந்த இருந்த காற்று மாசுபாட்டின் தன்மை குறைந்துள்ளது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நீண்டகாலத் திட்டங்களால் காற்று மாசு குறைந்துள்ளது. வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த 2000 மின்னணுப் பேருந்துகள் வாங்கப்பட்டன. டீசல் எரிபொருள் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் 24 மணிநேர மின்சாரத்துக்கான உத்திரவாதம் வழங்கப்பட்டது.

அனைத்து தொழிற்சாலைகளுமே காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருந்தன. அவை 100% சிஎன்ஜி எரிவாயுவால் இயக்கப்பட்டுள்ளன. தில்லியில் காடுகள் சார்ந்த பசுமைப்பகுதி 20 சதவீதத்திலிருந்து 23.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தில்லியில் மாசுபாடைந்த அனல் மின் நிலையம் முழுவதும் மூடப்பட்டது. ஆம் ஆத்மி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றங்களால் தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளது.

மாசுபாட்டைக் குறைக்க குளிர்காலத் திட்டம்

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் கடந்த 12 மாதங்களாக தில்லி அரசு தொடர்ந்து பணிகளை மேற்கொண்டது. காற்றுமாசைக் குறைக்கும் வகையில் குளிர்காலத் திட்டங்களும் வகுக்கப்படவுள்ளன. இதில் சேர்க்கும் வகையில் ஏதேனும் பரிந்துரைகள் இருந்தால் காங்கிரஸ், பாஜகவினர் அதனைத் தெரிவிக்கலாம். அதனை குளிர்காலத் திட்டங்களில் செயல்படுத்துவோம். இது தொடர்பாக காங்கிரஸ், பாஜகவுக்கு நாளை கடிதம் எழுதவுள்ளேன்'' என கோபால் ராய் கூறினார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!